Tuesday, March 28, 2017

அம்மா

என் பிரபஞ்சத்தில்
தூங்காத சூரியக்கீற்று
ஓசோனாய் அமைந்தாள்
ஒட்சிசனும் தந்தாள்


வானவில்லின் வளைவில்
வீணடித்த நேரத்தில்
நான் மறந்தபோதிலும்
மாறாத மகாவெளிச்சம்


சிவப்பிழந்த அவள்
வளைநுதலில் சில
சுருக்கு வந்தபோதும்
வெளுப்பிழக்காத தங்கம்


வறுமை வாட்டத்திலும்
வளத்தின் நீட்டத்திலும்
வளையாத நெடுஞ்சாலை
வற்றாத பாசச்சமுத்திரம்


மற்றவரெல்லாம் மகனை
வித்தகனென்ற போதும்
கெட்டவனென்ற போதும்
கொட்டமடிக்காத குற்றாலம்


மனிதம்செத்த வெளியெங்கும்
மரணிக்குதம்மா உணர்வுநொடி
மிச்சமான கடன்தீர்க்க தாயே
மீண்டுமென்னோடு பிறவியெடு

-வன்னியூர் செந்தூரன்-



No comments:

Post a Comment