Thursday, June 15, 2017

எங்கள் முதலமைச்சருக்கு ஒரு மடல்

விக்கினங்கள் தீர்க்குமிறையின்
நாமம் கொண்ட உங்களையே
நம்பியுள்ளார்கள் ஈழத்தமிழர்கள்
அரசியலில் உமை அழிக்க
ஆழக்குழிகள் வெட்டப்படுகிறது

அண்ணனின் காலத்தில் அவர்மீது
பயம் பக்தி இரண்டும் இருந்தது..
என்றும் அவர் நாமத்திற்கு அது தகும்...
அதனாலேயே தமிழனை ஒருநிலைப்படுத்த முடிந்தது
இன்றைய அரசியல் சூழமைவோ உம்மிடம்
காலச்சுமையை கட்டாயம் திணித்திருக்கிறது

உம்மில் பயம் பலருக்கு இல்லாவிடினும்
பக்தி எல்லா மக்களுக்குமுண்டென அறியுங்கள்
சூழ்ச்சிகளின் கூடாரமாய் மாறிவிட்ட வீட்டில்
ஒற்றைச் செங்கோலாவது வளையாமல் நிற்கட்டும்

தேசியப்பட்டியலில் அன்று உள்நுளைந்த
தோசப்பீடையது இன்று நவீன இராஜதந்திரியாம்
வேசம்போட்டு அடிகழுவும் காமடியன் மேடைகளில்
அவமானப்பட்டும் திருந்தவில்லை அரைவேக்காடு
ஐயா நீதிப்பெருமகனே அஞ்சாதீர்கள் யாருக்கும்
ஆன்மீகவாதியை அரசியலுக்கு வரவைத்தது விதி
அது காலம் உம்மிடம் ஒப்படைத்த கடமை

பாவியுயிர்களின் நிர்வாணக்கோலத்தின்
சாட்சியத்தில் எழும்பியது அரசியல் கதிரைகள்
நிலத்தை விட்டு விரட்டப்பட வேண்டிய நீசர்களுக்கு
புள்ளடியிட்டு புதுவாழ்வைக்காட்டிய
பெரும்தவறை இப்போது உணர்கிறோம்

ஒன்றை மட்டும் சொல்கிறேன் பெருமகனாரே
நீங்கள் பக்குவமடைந்தவர் வயதிலும் அனுபவத்திலும் செயல்கள் முதல் உரைகள் வரை காத்திரமாயுள்ளது
ஐம்பூதங்களின் அசைவும் உம்மில் கண்டேன்

பதவியாசையில் பலர் விலையும் போகலாம்
பதறாமல் நினைத்ததை முடியுங்கள்
இளைஞர் முதல் முதியோர் வரை
உங்கள் முடிவையே எதிர்பார்க்கிறார்கள்
வீட்டின் தலைமைப் பதவியும் உமக்கே பொருத்தம்
ஆழுமையற்ற ஊழல்களுக்கு இரக்கம் காட்டாதீர்கள்

காய்த்த மரமதில் கல்லெறிவிழுவதைப்போல
குற்றவாளிகளுக்கு உம்மில் விமர்சனம் வரலாம்
செங்கொடி பறந்த சிங்காரத்தமிழனது தேசத்தில்
மங்காது உம் நாமம் வரலாறாய் வாழ்ந்திருக்கும்
நம்பிக்கையுடன்..
வன்னியூர் செந்தூரன்
(14.06.2017)


No comments:

Post a Comment