Monday, March 27, 2017

கண்ணே நீ காந்தமடி

உன்னைப் பார்க்க இன்று
உனக்கே அருவருப்பாயிருக்கலாம்
உன்தேகம் அம்சவழகாயிருக்கலாம்
அன்றைய படத்தைக்கூட அவமானமாயுணரலாம்
வர்ணப்பூச்சுக்கள் உன்வதனத்தை
வாடகைக் கொள்வனவிட்டிருக்கலாம்
விழிமடலில் ஓவியமிட தூரிகைகள் காத்திருக்கலாம்
உதடுகள் செம்முத்தமிட்டே கண்திறக்கலாம்
கேசங்கள் வெப்பத்தால் பதனிட்டு
கருநீர் வீழ்ச்சியாய் வழிந்தோடலாம்
நறுமணப் பூச்சுகள் உன்னில் கமகமக்கலாம்
நறுமுகையே நீ நாகரீக நங்கை தான்
மருதாணி விரலில் இரசாயனம் மின்னலாம்
இடுப்பழகு காக்க போசனம் தவிர்த்திருக்கலாம்
உன் நடை முதல் உடை என்ன எடை கூட
இயல்பு மாற்றம் கண்டு இனிப்பாயிருக்கலாம்
ஓ கண்ணே ஒன்றைப் புரிவாயா அழகே
எண்ணை படிந்த முகத்தின் நயம்
எந்த நவீன முகக்களியிலும் வராதடி
தேங்காயெண்ணை மணத்தின் கூத்தலோ
தனியொரு ஈர்ப்படி ,நவீனம் எம் நலிவடி
விழியோரம் படரும் கருங்காடு கூட
கண்ணுக்கோர் பருவக் கவர்ச்சியடி
மைபூசாத இதழ்கள் செழிப்புச் சுரங்கமடி
மருண்டு திரண்ட அங்கங்கள் நளின
மங்கைதன் இயற்கை அடையாளமடி
எதை நீ சிறப்பென நினைக்கிறாய்?
நவீனத்தை நலமென உணர்கிறாயா?
யார் விதித்தது இயற்கையை மாற்றுமெண்ணம்?
இயம்புகிறேன் கேள் ,
உன் கபடமற்ற அழகுதான் காந்தமடி
.........இப்படிக்கு நான்...

~வன்னியூர் செந்தூரன்~



No comments:

Post a Comment