Thursday, June 15, 2017

எங்கள் முதலமைச்சருக்கு ஒரு மடல்

விக்கினங்கள் தீர்க்குமிறையின்
நாமம் கொண்ட உங்களையே
நம்பியுள்ளார்கள் ஈழத்தமிழர்கள்
அரசியலில் உமை அழிக்க
ஆழக்குழிகள் வெட்டப்படுகிறது

அண்ணனின் காலத்தில் அவர்மீது
பயம் பக்தி இரண்டும் இருந்தது..
என்றும் அவர் நாமத்திற்கு அது தகும்...
அதனாலேயே தமிழனை ஒருநிலைப்படுத்த முடிந்தது
இன்றைய அரசியல் சூழமைவோ உம்மிடம்
காலச்சுமையை கட்டாயம் திணித்திருக்கிறது

உம்மில் பயம் பலருக்கு இல்லாவிடினும்
பக்தி எல்லா மக்களுக்குமுண்டென அறியுங்கள்
சூழ்ச்சிகளின் கூடாரமாய் மாறிவிட்ட வீட்டில்
ஒற்றைச் செங்கோலாவது வளையாமல் நிற்கட்டும்

தேசியப்பட்டியலில் அன்று உள்நுளைந்த
தோசப்பீடையது இன்று நவீன இராஜதந்திரியாம்
வேசம்போட்டு அடிகழுவும் காமடியன் மேடைகளில்
அவமானப்பட்டும் திருந்தவில்லை அரைவேக்காடு
ஐயா நீதிப்பெருமகனே அஞ்சாதீர்கள் யாருக்கும்
ஆன்மீகவாதியை அரசியலுக்கு வரவைத்தது விதி
அது காலம் உம்மிடம் ஒப்படைத்த கடமை

பாவியுயிர்களின் நிர்வாணக்கோலத்தின்
சாட்சியத்தில் எழும்பியது அரசியல் கதிரைகள்
நிலத்தை விட்டு விரட்டப்பட வேண்டிய நீசர்களுக்கு
புள்ளடியிட்டு புதுவாழ்வைக்காட்டிய
பெரும்தவறை இப்போது உணர்கிறோம்

ஒன்றை மட்டும் சொல்கிறேன் பெருமகனாரே
நீங்கள் பக்குவமடைந்தவர் வயதிலும் அனுபவத்திலும் செயல்கள் முதல் உரைகள் வரை காத்திரமாயுள்ளது
ஐம்பூதங்களின் அசைவும் உம்மில் கண்டேன்

பதவியாசையில் பலர் விலையும் போகலாம்
பதறாமல் நினைத்ததை முடியுங்கள்
இளைஞர் முதல் முதியோர் வரை
உங்கள் முடிவையே எதிர்பார்க்கிறார்கள்
வீட்டின் தலைமைப் பதவியும் உமக்கே பொருத்தம்
ஆழுமையற்ற ஊழல்களுக்கு இரக்கம் காட்டாதீர்கள்

காய்த்த மரமதில் கல்லெறிவிழுவதைப்போல
குற்றவாளிகளுக்கு உம்மில் விமர்சனம் வரலாம்
செங்கொடி பறந்த சிங்காரத்தமிழனது தேசத்தில்
மங்காது உம் நாமம் வரலாறாய் வாழ்ந்திருக்கும்
நம்பிக்கையுடன்..
வன்னியூர் செந்தூரன்
(14.06.2017)


Tuesday, June 13, 2017

நீயும் நானும் இழந்தவையும் பெற்றவையும்



நினைவுகள் அண்மையாகவே நிற்கின்றன
நிஜங்களோ காலத்தை விட வேகம்கொண்டு
தீரத்தைக் காட்டி தீர்க்கதரிசனத்தை உரைக்கின்றன
இதற்கு விடைதேடின் கவலையே கருக்கொள்ளும்

அதிகாலை வெள்ளடியன் சேவலின் குரலெங்கே
ஆதவனின் தரிசனத்தை தொழுத கரங்களெங்கே
கையில் சக்கரைத் துண்டுடன் தேனீரெங்கே
வயிற்றை நிரப்பிய பயறிட்ட பாற்கஞ்சியெங்கே
வெங்காயம் மிளகாய் போட்ட பழையகஞ்சி எங்கே

தீப்பந்தம் பிடித்து பனங்கொட்டை பொறுக்கியது
மாடு ஈத்த பனங்காயில் இரண்டை எடுத்தாலும்
மூன்றாவதை தேடும் ஆரவாரப் போட்டி ~அவற்றை
உரப்பையிலே முதுகில் சுமந்து நடக்கும்ஆனந்தம்
அவையெல்லாம் அடியோடொழிந்து போனதெங்கே

கரப்பு தூண்டிலிட்டு விரால் ,கெளிறுடன் ,பனையேறி
கொட்டடைத்தும் பெட்டியன்,கச்சல் பிடித்தோமே
ஓலைக்குசினியின் கூரையில் படிந்த கறுப்பு ஒட்டறை
காயத்திற்கும் அது சிலநேரம் மருந்தாகும் அதிசயம்..
உறியில் தொங்கிய கறிச்சட்டி நினைவிருக்குதா..?

சோடி நாம்பனால் உழுதிட்ட சாலின் அழகு
சோழியன் மண்வெட்டியால் கட்டிய வக்கடவான்
கோழிகொத்தாமல் கூடடைத்த வட்டக் கொச்சி
பீலிவாய்க்காலில் சின்ன தண்ணீர்ச் சண்டை

வேம்பம்பூ வடகம் சாப்பாட்டில் பங்கேற்கும்
வேம்பங்கொட்டை பொறுக்கும் சிறார்கள்
வட்டுக்காய் வதக்கலின் தித்திப்புச்சுவை
பஞ்சையரிசிச் சோறுடன் தயிர்த்திரளை

பனையோலையால் வரியப்பட்ட வேலியின் எழில்
படலையை அடையாளமிடும் காயாப்பூட்டுத்தடி
முற்றத்தில் செங்கல்லால் சூழப்பட்ட செந்துளசி
மாங்கொப்பில் பாடியபடி தொங்கும் சொனி ரேடியோ

சாணத்தால் மெழுகிய நிலத்தின் கைவிரற் கோடுகள்
செம்மண்ணால் பூசிய மண்சுவரின் குளிர்மை
வரிச்சிட்டு பனையோலையால் வேய்ந்த வீட்டுக்கூரை
ஆங்காங்கு தொங்கியபடி நார்களில் கொசுக்கூட்டம்

முற்றத்து ஓரத்தில் கோழியடைக்கும் பிரம்புக்கூடை
அடை வைப்பதற்கென உமியிட்ட காட்போட் பெட்டி
காணியின் ஓரத்தில் மேடாய்தெரியும் பனம்பாத்தி
களைப்பைப் போக்கி ஓய்வெடுக்க சாக்குக்கட்டில்

வெய்யிலில் காய்ந்து சிவந்த பனாட்டுத் தட்டுக்கள்
உடல்பிளந்து கொடியில் தொங்கிக்காயும் ஒடியல் மரவள்ளிக்கிழங்கு அவியலுடன் மிளகாய்ச்சம்பல்
அடுப்பில் சுட்டு பிய்த்துண்ணும் பனம்பழத்தின் வாசம்

கிளித்தட்டு கிட்டிப்புளுடன் பாண்டிக்குழிகள்
கரியேறிப்போன மண் கறிச்சட்டியின் கைராசி
மண்ணடுப்புக்கருகில் நாலைந்து திருகணைகள்
குப்பிவிளக்கோ,உப்பிட்டு எரியும் சிக்கனவிளக்கோ
அரிகன் லாம்போ அவசியம் இருக்கும் இரவில்

நுளம்புத்தொல்லைக்கு வேம்பம் புகையே பரிகாரம்
குளிர்காத்தில் நெருப்பில் கூதல் காய்தல் ஒருசுகம்
உடலை தூய்மையாக்கும் ஒடியற்கூழ் அடிக்கடி
உபாதை போக்கும் ஆயுள்வேத பேதி மாத்திரை
சுதந்திரமாய் கழிவகற்றும் சுற்றுவெளிக்காடுகள்

வீட்டுப்பத்தியில் சேர்க்கப்பட்ட விறகுக்கட்டுக்கள்
அடுப்பு புகட்டில் ஆடியபடி பன்ன நீத்துப்பெட்டி
கோடிச்செல்வமாக மதிக்கப்பட்ட கொம்பறை
கோமாதாவிற்கும் ஒருபட்டி தனித்தனி பெயர்கள்
புல்லுப்பாயில் படுக்கும் உல்லாசமே தனியானது

அரிவிச்சிந்து பாடல் கேட்ட களனிப்பரப்புகள்
குருவிக்காவல் குரங்குக்காவல் பரண்கள்
போர்வைத்து பூரிப்படைந்து பொங்கலிடல்–மாட்டால்
சூடடித்து பொலிதூற்றும் குல்லமும் தென்றலும்
வளந்து நெல்லெடுத்து வீட்டில் கட்டும் வழக்கம்

இறுங்கு திணை குரக்கன் சாமை உணவுகளின் உரம்
இடையிடையே கோவிலில் ஊர்கூடி மோதகமடை
பாரங்கள் ஏற்றிவரும் பலகை மாட்டுவண்டில்
கூடாரமமைத்து ஊர்போகும் திருவிழாக்காண
பற்றைகள் காடுகளுக்கிடையில் ஒற்றையடிப்பாதை

அம்மியில் அரைத்த கறி அமிர்த வாசம்
ஆட்டுகல்லிலரைத்துச்சுட்ட உழுத்துவடை ஆகா
வந்தாரை வரவேற்றமர்த்தும் மண் திண்ணை
வாழை இலையில் ஊர் விருந்து நல்ல மருந்து

ஆழப்பெருங்கிணற்றிலும் நீர்இறைக்கும் துலா
ஆடிமாதத்தில் பழப்புளிப்பன்னமும் ஊறுகாயும்
சோழகக்காற்றிலும் சொர்க்கமாய் சொப்பனம்
மாரி வந்தால் அவித்தகச்சானும் கோப்பியும்
மரகதப்பொற்காலமது இதுமட்டுமல்ல ஏராளமுண்டு

நானும் நீயும் பெற்றதென்ன இன்று
இரசாயன உலகின் வெப்பக்காற்றை
நோய்க்கூடான தகதகப்பு உடலை
துணையின்றினும் கைபேசி தேடும் மனதை
திரைநாடகமின்றி தூங்காத விழிகளை

இயந்திரங்களுடன் அல்லாடும் வாழ்வியலை
கட்டடக் காடுகளின் அழகுப் பூரிப்பை
இயற்கைக்கு முரணான செயற்கையின்
அத்தனை சூட்சுமங்களுக்குள்ளும் மாண்டுவிட்டோம்
இதற்கு நாமிட்ட பெயர் நாகரீகம் விஞ்ஞான வளர்ச்சி

அத்தனை பொக்கிசங்களையும் இழந்து
இன்பமற்று அலைகிறோமே
இன்னுமேன் உணரவில்லை
உண்மைகளைப் புதைத்துவிட்டோம்
போலிப் புன்னகைகளை சூடிக்கொண்டோம் இன்று
மனங்களைக் கொன்றுவிட்டு எங்கோ
மனிதத்தைத் தேடிக்கொண்டிருக்கிறோம்

எம் பழக்கங்களை மாற்றியபோதே
பண்பாடும் மாறிப்போனது
பாரம்பரியம் அன்றே பாடையேறியது
அடையாளத்தை தொலைக்குமினம்
வரலாறிழந்து போகுமென்பது வெறும் கதையல்ல
யாரோ ஒருவனின் பண்பாட்டில்
அவனியில் பெருமையாய் அலைகிறோம்
–வன்னியூர் செந்தூரன்–


Wednesday, May 17, 2017

உயிர்க்கொடையை மறப்பீரோ...?


வேட்டொலி   முழங்கிய நாட்டினிலே
காட்டிடை கனல் வளர்த்த வீரர்களே
தோற்றிடா கொள்கையின் தொட்டிலதில்
ஊட்டிய தவமதின் உன்னதப் பேறுகளே

முள்ளிவாய்க்காலை முடிவென்று யார் சொன்னது
அள்ளித்தின்ற மண்ணில் ஆயிரமாயிரம் கதையுண்டு
அம்மணமாய் கிடந்த உடல்கள் அத்தனையிலும்
அழியாத அஸ்திரத்தீயால் வரலாறு வரையப்பட்டது

இறுதியுரையின் முடிவை மீண்டும் கேளுமப்பா
உறுதிபட உரைத்தாரே எம் இனத்தின் அப்பா
வஞ்சனையின் போகமென்று வருந்தி நீயும்..
வலுவிழந்து போகாதே போராடு காலத்தோடு..

தியாகங்கள் உறங்கும் பதியின் மேலே
கோமாளிகளின் அரண் எழட்டும்– இன்னும்
உங்களின் அடிகளை மாற்றான் மறக்கவில்லை
எழுந்துவிடுவீர்கள் என்ற பயமாக கூட இருக்கலாம்

ஆனந்தபுர முற்றுகையின் இறுதிச்சன்னத்திலே
வானுயந்து நின்றது வீரப்பரம்பரையின் தீரம்
இலட்சக்கணக்கான எதிரிகளை பலியெடுத்தே
தமிழனின் கணைகள் மௌனமானது தெரியுமா ?

வெற்றுக் கப்பல்களை அனுப்பிய பேராசைகளால்
இரகசியம் கசியவிட்ட வெற்று போலிகளால்
பதவிக்காக மௌனமிருந்த அரசியல் கதிரைகளால்
சேர்ந்து வந்த இருபது தேசங்களாலே இந்நிலை
இது எம் பலவீனமல்ல ..தமிழனை அடக்கிப்பார்க்க
இருபது அரசுப்பலம் தேவைப்பட்டிருக்கிறதே..

ஆனால் இன்றைய நிலை என்ன..?
பிள்ளையை கிள்ளியவனே தொட்டிலும் ஆட்டுகிறான்
தாயின் முலையறுத்தவனே –சேய்க்கு
பால்மாவை பரிந்துரை செய்கிறான்
நிலாக்காட்டி சோறூட்டிய தந்தை
காணாமல்போனார் பட்டியலில்– இன்று
வெசாக்கூட்டு வெளிச்சத்தால்
நகரத்து நிலவதோ வெட்கத்திலே...

பூகோளச் சுற்றுகைச் சூட்சுமப்புள்ளி ஒருநாள்
பாராமல் போகாது தமிழனை ஒருமுறையேனும்
அரசியல் பேசும் வியாபாரிகளை காலம் துரத்தும்
நாயகர்கள் காவியங்கள் சாசனமாய் வரையப்படும்
என் இனத்து இளைய தலைமுறைக்கு சொல்லிக்கொடு கட்டாயம் அஞ்சாதே
முந்தையரின் வீரகாவியத்தை நினைவுபடுத்தியிரு..
எத்தனை காலம் கடந்தோடினும் ~எமக்கு
பொற்காலத்தவமென்பது அக்காலமே.,,

~வன்னியூர் செந்தூரன்~
(Google Image)

Tuesday, April 25, 2017

குருவிகளின் கும்மாளமெல்லாம்

குருவிகளின் கும்மாளமெல்லாம்
கிளைக்கு சொந்தமில்லையென
கூவிச்சொல்கிறது காலக்காற்று..
விழுதுகளை நம்பியதாலே வேரது
பாதிப்பலமிழந்ததாகப் பேச்சு..
தனிமைவாழ்வில் சிறைப்படும் போது
தத்துவம் தித்திக்கும் காலம் கடந்து...


என்ன பதில் சொல்லப்போகிறோம்...?

செம்புழுதி மோகம் தொலைத்த கருவீதியே
செங்குருதி சிதைத்தோடியதை மறைத்தாயா..?
பொங்காது பொலிவிழந்த பேரலையே
சிங்காரத்தமிழை சிதைப்பவரை அழிப்பாயா..?
அகத்தியனைப் போன்ற புலஸ்தியன் புரமோ
பொலநறுவையாக அவதாரமாச்சு அன்று
மருதச்சோலையாம் முதலிக்குளமோ
மொரவேவ என்று முறுக்கேறியது இன்று
திரிகோணமலை என்றுரைக்க கூசுதப்பா பலருக்கு
றிங்கோ என்றால் பெருமைப் பூரிப்புத்தானே..
யாழ்ப்பாணம் என்ற தூயதமிழ்ச்சொல்லை
படித்தவர் முதல் பாமரர் வரை பலர் மறந்ததால்
ஜப்(f)னா என்றாலே நாகரீகமான பதமாக பதிவாச்சு
மீன்பாடும் தேன் நாட்டுக்கு சாபக்கேடோ..¡
பரப்பில் பெரிய தேசமொன்று பறிபோனது வேகமாக..
பற்றி(batti) என்றுரைத்தால் வெற்றிமொழி போலும்
நாட்டை இழந்த நாம் ஊரையுமிழக்கத் துடிக்கிறோம்
இனமழித்தகயவர்கள் பச்சோந்திகள் சிலரின் பதிகள்
பியந்த சேர் ,தமித்த சேர், உருகுகிறார் சில சீதைகள்
பிணத்திலிருந்து தாலியறுத்த தனவந்தனோ
சனத்தின் உரிமைக்காய் தத்துவம் உளறுகிறான்.
சலுகையென்றால் வாந்தியைக்கூட நக்குவார் சிலர்
அரச வேலைக்காய் அமைச்சர்கள் வேணுமாம்
அரசியல் பணியில் பூரண தமிழ்ப்பற்றாளர்களாம்
அண்ணா.உன் இடம் இன்றல்ல என்றும் வெற்றிடமே
நுவரவாவி எனுமிடத்தின் ஆட்சி தமிழனிடமிருந்தது
அனுராதபுரமாக மாற அனைத்துமிழந்தோமே...
இயக்கச்சி ஐயக்கச்சியாக அவதாரம் மாறியாச்சு
யாழ்ப்பாணமும் “ஏலப்பாண”ஆக மாறமுயலும்
ஒன்றைப் புரிந்துகொள் ஒற்றுமைகெட்ட தமிழா
வரலாறு தான் எம் இருப்பு.
இருப்பில்லாமல் இனத்துக்கேது சிறப்பு
முள்ளிவாய்க்காலை மூலதனமாக்கும் மேதாவிகளே
ஒற்றை நினைவுக்கல் நடமுடிந்ததா உம் அரசியலால்
நல்லாட்சியும் நல்லிணக்கமும் நாசமாய் போக..
ஒஸ்கார் விருதுக்கு விண்ணப்பியுங்கள் நடிகர்களே
உங்களுக்கே வெற்றிக்கிண்ணம் திலகங்களே
ஓர் தனித்த இரவுகள் உங்களுக்காக இருக்கும்
மயான அமைதியில் மனம் தீயாய் சுட்டெரிக்கும்
குற்றப்பத்திரிகைகள் கூர்வாளாய் கிழிக்கும்
கல்லறைக்கனவுகளின் நிதர்சனம் தெளிவாயிருக்கும்
காலம் கடந்து தவறுகள் புரியப்படும் அந்நேரம்~உம்
கதிரைகள் கூட களவாடப்பட்டிருக்கும் ....


~வன்னியூர் செந்தூரன்~


Sunday, April 9, 2017

"ஒரு கட்டில் கதறுகிறது "

அருந்ததிக்கு ஆணைவைத்து
அம்புலிக்கு விடைகொடுத்து
பட்டமரம் ஒட்டியபின் 
தட்டுவார் எனது மேனி
புனிதமான பந்தம்கண்டு நான்
பூரித்தும் மகிழ்ந்ததுண்டு
அதுவும் ஒரு காலம்
பஞ்சத்தை தொட்ட என்
பாழாய்ப்போன வீட்டுக்காரன்
விற்றுவிட்டான் என்னையும்
வீட்டோடு சேர்த்து ஒரு
விளங்காமல் போனவனுக்கு
அன்று முதல் எனக்கு
ஆரைச்சனியும் தொடங்கிற்று
அலங்கார விடுதியாய்
அரண்மனையும் ஆகிற்று
அருவருப்பும் கூடிற்று
வகைவகையாய் வருவார்கள்
வண்ணவண்ண உடையணிந்து
ஆடைகள் எல்லாம்
அம்மணம் ஆனதால்
அருவருக்கிறது ஜடம்கூட
பஞ்சணையில் நெஞ்சமைத்து
பணத்தால் உடல்கழுவும்
பாதகரை தினம் பார்த்து
பதறுது இந்த ஜடம்
காசுத்தராசில்
கணத்துளி உழைப்பிடும்
கயவர்களை கண்டு இந்த
கட்டிலுமே கதறுகிறேன்
காப்பாற்ற வருவீரோ
கண்ணியமான மானிடரே ...?
...... "வன்னியூர் செந்தூரன்"...

Tuesday, April 4, 2017

காடு போய் நாடு போய் வீடு போனது

வீட்டின் விஞ்ஞாபனமெல்லாம்
விலையாகிப் போனதையா
கட்டியவன் எவனோ
காத்தவன் எவனோ
திட்டம் தீட்டியவனும் எவனோ–இன்று
கொட்டமிடுபவன் எவனோ

கட்டிய மேசனுமின்றில்லை
கல்லுத்தூக்கிய கூலியுமின்றில்லை
வாடகைக்கு வந்த பேடி
வக்கணையாய் பேசுதப்பா
கோடி மலை குவிக்கவெண்ணி
குலத்தையே அழிக்குதப்பா

யானை சிங்கம் வரக்கூடாதென
கட்டுவெடி கட்டிய காலமோ
கப்பலேறிப் போனதப்பா
யானையின் கூடாரமாய் இன்று
சோரம்போனது கூரையப்பா

சுற்றியுள்ள வாழைத்தோப்போ
கத்திக்கத்தி கதறுதப்பா
தந்திர நகர்வென்று மத்திரித்து மழுப்புதப்பா
சுடுகாட்டுச் சுந்தரியின் அந்தரப்புத்திஜீவி

யானை ஏதாவது போடுமென
வாலைக் கிழப்பிப் பார்த்து
வாய்பிளந்து நிற்குதப்பா
வந்தவழி மறந்த வானரங்களிங்கு

பழுப்பேறிய மூளைக்கு பாடை என்றோ..?
கறுப்பு கண்ணபிரானுக்கும் கதிரை ஆசையாமே
சுத்துமாத்து சுண்டி மோதிரத்தை
சூலத்தில் இறுக்கினாலே புண்ணியமாம்

வீட்டை விட்டு இடம்பெயர்தல் முறையல்ல
விசமிகளை அகற்று வீடு தூய்மைபெறும்
களனியை கைவிடாதே களைகளை பிடிங்கியெறி
வளமான போகத்தை அறிவாலே அமைத்துப்பார்.

–வன்னியூர் செந்தூரன்–