Tuesday, April 25, 2017

என்ன பதில் சொல்லப்போகிறோம்...?

செம்புழுதி மோகம் தொலைத்த கருவீதியே
செங்குருதி சிதைத்தோடியதை மறைத்தாயா..?
பொங்காது பொலிவிழந்த பேரலையே
சிங்காரத்தமிழை சிதைப்பவரை அழிப்பாயா..?
அகத்தியனைப் போன்ற புலஸ்தியன் புரமோ
பொலநறுவையாக அவதாரமாச்சு அன்று
மருதச்சோலையாம் முதலிக்குளமோ
மொரவேவ என்று முறுக்கேறியது இன்று
திரிகோணமலை என்றுரைக்க கூசுதப்பா பலருக்கு
றிங்கோ என்றால் பெருமைப் பூரிப்புத்தானே..
யாழ்ப்பாணம் என்ற தூயதமிழ்ச்சொல்லை
படித்தவர் முதல் பாமரர் வரை பலர் மறந்ததால்
ஜப்(f)னா என்றாலே நாகரீகமான பதமாக பதிவாச்சு
மீன்பாடும் தேன் நாட்டுக்கு சாபக்கேடோ..¡
பரப்பில் பெரிய தேசமொன்று பறிபோனது வேகமாக..
பற்றி(batti) என்றுரைத்தால் வெற்றிமொழி போலும்
நாட்டை இழந்த நாம் ஊரையுமிழக்கத் துடிக்கிறோம்
இனமழித்தகயவர்கள் பச்சோந்திகள் சிலரின் பதிகள்
பியந்த சேர் ,தமித்த சேர், உருகுகிறார் சில சீதைகள்
பிணத்திலிருந்து தாலியறுத்த தனவந்தனோ
சனத்தின் உரிமைக்காய் தத்துவம் உளறுகிறான்.
சலுகையென்றால் வாந்தியைக்கூட நக்குவார் சிலர்
அரச வேலைக்காய் அமைச்சர்கள் வேணுமாம்
அரசியல் பணியில் பூரண தமிழ்ப்பற்றாளர்களாம்
அண்ணா.உன் இடம் இன்றல்ல என்றும் வெற்றிடமே
நுவரவாவி எனுமிடத்தின் ஆட்சி தமிழனிடமிருந்தது
அனுராதபுரமாக மாற அனைத்துமிழந்தோமே...
இயக்கச்சி ஐயக்கச்சியாக அவதாரம் மாறியாச்சு
யாழ்ப்பாணமும் “ஏலப்பாண”ஆக மாறமுயலும்
ஒன்றைப் புரிந்துகொள் ஒற்றுமைகெட்ட தமிழா
வரலாறு தான் எம் இருப்பு.
இருப்பில்லாமல் இனத்துக்கேது சிறப்பு
முள்ளிவாய்க்காலை மூலதனமாக்கும் மேதாவிகளே
ஒற்றை நினைவுக்கல் நடமுடிந்ததா உம் அரசியலால்
நல்லாட்சியும் நல்லிணக்கமும் நாசமாய் போக..
ஒஸ்கார் விருதுக்கு விண்ணப்பியுங்கள் நடிகர்களே
உங்களுக்கே வெற்றிக்கிண்ணம் திலகங்களே
ஓர் தனித்த இரவுகள் உங்களுக்காக இருக்கும்
மயான அமைதியில் மனம் தீயாய் சுட்டெரிக்கும்
குற்றப்பத்திரிகைகள் கூர்வாளாய் கிழிக்கும்
கல்லறைக்கனவுகளின் நிதர்சனம் தெளிவாயிருக்கும்
காலம் கடந்து தவறுகள் புரியப்படும் அந்நேரம்~உம்
கதிரைகள் கூட களவாடப்பட்டிருக்கும் ....


~வன்னியூர் செந்தூரன்~


No comments:

Post a Comment