Tuesday, April 25, 2017

குருவிகளின் கும்மாளமெல்லாம்

குருவிகளின் கும்மாளமெல்லாம்
கிளைக்கு சொந்தமில்லையென
கூவிச்சொல்கிறது காலக்காற்று..
விழுதுகளை நம்பியதாலே வேரது
பாதிப்பலமிழந்ததாகப் பேச்சு..
தனிமைவாழ்வில் சிறைப்படும் போது
தத்துவம் தித்திக்கும் காலம் கடந்து...


என்ன பதில் சொல்லப்போகிறோம்...?

செம்புழுதி மோகம் தொலைத்த கருவீதியே
செங்குருதி சிதைத்தோடியதை மறைத்தாயா..?
பொங்காது பொலிவிழந்த பேரலையே
சிங்காரத்தமிழை சிதைப்பவரை அழிப்பாயா..?
அகத்தியனைப் போன்ற புலஸ்தியன் புரமோ
பொலநறுவையாக அவதாரமாச்சு அன்று
மருதச்சோலையாம் முதலிக்குளமோ
மொரவேவ என்று முறுக்கேறியது இன்று
திரிகோணமலை என்றுரைக்க கூசுதப்பா பலருக்கு
றிங்கோ என்றால் பெருமைப் பூரிப்புத்தானே..
யாழ்ப்பாணம் என்ற தூயதமிழ்ச்சொல்லை
படித்தவர் முதல் பாமரர் வரை பலர் மறந்ததால்
ஜப்(f)னா என்றாலே நாகரீகமான பதமாக பதிவாச்சு
மீன்பாடும் தேன் நாட்டுக்கு சாபக்கேடோ..¡
பரப்பில் பெரிய தேசமொன்று பறிபோனது வேகமாக..
பற்றி(batti) என்றுரைத்தால் வெற்றிமொழி போலும்
நாட்டை இழந்த நாம் ஊரையுமிழக்கத் துடிக்கிறோம்
இனமழித்தகயவர்கள் பச்சோந்திகள் சிலரின் பதிகள்
பியந்த சேர் ,தமித்த சேர், உருகுகிறார் சில சீதைகள்
பிணத்திலிருந்து தாலியறுத்த தனவந்தனோ
சனத்தின் உரிமைக்காய் தத்துவம் உளறுகிறான்.
சலுகையென்றால் வாந்தியைக்கூட நக்குவார் சிலர்
அரச வேலைக்காய் அமைச்சர்கள் வேணுமாம்
அரசியல் பணியில் பூரண தமிழ்ப்பற்றாளர்களாம்
அண்ணா.உன் இடம் இன்றல்ல என்றும் வெற்றிடமே
நுவரவாவி எனுமிடத்தின் ஆட்சி தமிழனிடமிருந்தது
அனுராதபுரமாக மாற அனைத்துமிழந்தோமே...
இயக்கச்சி ஐயக்கச்சியாக அவதாரம் மாறியாச்சு
யாழ்ப்பாணமும் “ஏலப்பாண”ஆக மாறமுயலும்
ஒன்றைப் புரிந்துகொள் ஒற்றுமைகெட்ட தமிழா
வரலாறு தான் எம் இருப்பு.
இருப்பில்லாமல் இனத்துக்கேது சிறப்பு
முள்ளிவாய்க்காலை மூலதனமாக்கும் மேதாவிகளே
ஒற்றை நினைவுக்கல் நடமுடிந்ததா உம் அரசியலால்
நல்லாட்சியும் நல்லிணக்கமும் நாசமாய் போக..
ஒஸ்கார் விருதுக்கு விண்ணப்பியுங்கள் நடிகர்களே
உங்களுக்கே வெற்றிக்கிண்ணம் திலகங்களே
ஓர் தனித்த இரவுகள் உங்களுக்காக இருக்கும்
மயான அமைதியில் மனம் தீயாய் சுட்டெரிக்கும்
குற்றப்பத்திரிகைகள் கூர்வாளாய் கிழிக்கும்
கல்லறைக்கனவுகளின் நிதர்சனம் தெளிவாயிருக்கும்
காலம் கடந்து தவறுகள் புரியப்படும் அந்நேரம்~உம்
கதிரைகள் கூட களவாடப்பட்டிருக்கும் ....


~வன்னியூர் செந்தூரன்~


Sunday, April 9, 2017

"ஒரு கட்டில் கதறுகிறது "

அருந்ததிக்கு ஆணைவைத்து
அம்புலிக்கு விடைகொடுத்து
பட்டமரம் ஒட்டியபின் 
தட்டுவார் எனது மேனி
புனிதமான பந்தம்கண்டு நான்
பூரித்தும் மகிழ்ந்ததுண்டு
அதுவும் ஒரு காலம்
பஞ்சத்தை தொட்ட என்
பாழாய்ப்போன வீட்டுக்காரன்
விற்றுவிட்டான் என்னையும்
வீட்டோடு சேர்த்து ஒரு
விளங்காமல் போனவனுக்கு
அன்று முதல் எனக்கு
ஆரைச்சனியும் தொடங்கிற்று
அலங்கார விடுதியாய்
அரண்மனையும் ஆகிற்று
அருவருப்பும் கூடிற்று
வகைவகையாய் வருவார்கள்
வண்ணவண்ண உடையணிந்து
ஆடைகள் எல்லாம்
அம்மணம் ஆனதால்
அருவருக்கிறது ஜடம்கூட
பஞ்சணையில் நெஞ்சமைத்து
பணத்தால் உடல்கழுவும்
பாதகரை தினம் பார்த்து
பதறுது இந்த ஜடம்
காசுத்தராசில்
கணத்துளி உழைப்பிடும்
கயவர்களை கண்டு இந்த
கட்டிலுமே கதறுகிறேன்
காப்பாற்ற வருவீரோ
கண்ணியமான மானிடரே ...?
...... "வன்னியூர் செந்தூரன்"...

Tuesday, April 4, 2017

காடு போய் நாடு போய் வீடு போனது

வீட்டின் விஞ்ஞாபனமெல்லாம்
விலையாகிப் போனதையா
கட்டியவன் எவனோ
காத்தவன் எவனோ
திட்டம் தீட்டியவனும் எவனோ–இன்று
கொட்டமிடுபவன் எவனோ

கட்டிய மேசனுமின்றில்லை
கல்லுத்தூக்கிய கூலியுமின்றில்லை
வாடகைக்கு வந்த பேடி
வக்கணையாய் பேசுதப்பா
கோடி மலை குவிக்கவெண்ணி
குலத்தையே அழிக்குதப்பா

யானை சிங்கம் வரக்கூடாதென
கட்டுவெடி கட்டிய காலமோ
கப்பலேறிப் போனதப்பா
யானையின் கூடாரமாய் இன்று
சோரம்போனது கூரையப்பா

சுற்றியுள்ள வாழைத்தோப்போ
கத்திக்கத்தி கதறுதப்பா
தந்திர நகர்வென்று மத்திரித்து மழுப்புதப்பா
சுடுகாட்டுச் சுந்தரியின் அந்தரப்புத்திஜீவி

யானை ஏதாவது போடுமென
வாலைக் கிழப்பிப் பார்த்து
வாய்பிளந்து நிற்குதப்பா
வந்தவழி மறந்த வானரங்களிங்கு

பழுப்பேறிய மூளைக்கு பாடை என்றோ..?
கறுப்பு கண்ணபிரானுக்கும் கதிரை ஆசையாமே
சுத்துமாத்து சுண்டி மோதிரத்தை
சூலத்தில் இறுக்கினாலே புண்ணியமாம்

வீட்டை விட்டு இடம்பெயர்தல் முறையல்ல
விசமிகளை அகற்று வீடு தூய்மைபெறும்
களனியை கைவிடாதே களைகளை பிடிங்கியெறி
வளமான போகத்தை அறிவாலே அமைத்துப்பார்.

–வன்னியூர் செந்தூரன்–