Tuesday, March 28, 2017

அமரரான அப்பாவுக்காக துயரத்தோடு சிலவரிகள்

ஈழமண்ணில் பெருக்கெடுத்த
இரத்தஆற்றில் உன் செங்குருதியும்
சூடாக்கிக்கொதித்ததை இன்று அறிவேன்..
பதினாறு வருடங்களின் முன்
பாலகனான எனக்கு உன் மறைவின்
பாதிப்பின் பக்கவினை ஏதும் தெரியவில்லை..


மன்னார் மண்ணை இன்றும்
நெஞ்சில் நினைப்பேன் அடிக்கடி
உன்மூச்சுநின்ற பூமியென்பதால்...
மரணச்சடங்கே செய்யாத உன்கூடு
புதைகுழி ஒன்றில் மறைக்கப்பட்டிருக்கும்..
வன்னிமண்ணுக்கு வழமையான சாபமிது

வயதுவந்து நோய்துரத்தி நீ மாண்டிருந்தால்
வலிஏதும் வருத்தியிருக்காது மனதை..
இளவயதில் அம்மாவின் கனவுகளையுமல்லவா
கரைத்துவிட்டு கவலையின்றி கலைந்துபோனாய்.
கடைக்குட்டித்தங்கைக்கு உன்முகமே தெரியாது
அப்பனைத்தின்றவளென அயலாரின் சொல்கேட்டாள்..

சுட்டுப்போட்ட வெற்றுடலைக்கூடத்தராத
கேடுகெட்டசிங்களவனை மன்னிப்பேனா என்றும். ?
இனத்துவேசவாதியென பட்டம் பெற்றேன்
படிக்கப்போன பல்கலைக்கழகம் முதலீறாய்...
அடிகொடுக்க என் பேனாமுனையும் இன்று
ஆக்குரோசமாய் பயிற்றப்பட்டுவிட்டது உண்மை.

மூத்தவன் எனக்கு குடும்பச்சுமையை
முதுகிலேற்றிவிட்டுப்போய்விட்டீர்..
வலிகளோடு மகிழும் வலிமையைத்தந்ததும்
வாழ்க்கையின் பள்ளங்களில் மீண்டுவரச்செய்ததும்
சமுதாயம் கற்பித்த இலவசப்பாடங்கள் தான்.. 

சரிவுகளிலும் இன்றும் சட்டக்கம்பியாய் நிற்கிறது
இருந்தாலும் ஒரு உறுத்தல் எனக்குண்டு..
நான் மருத்துவனாக வேண்டுமென விரும்பியதாக
அம்மா சொல்லித்தான் அறிந்தேன்
அதற்காகவே விஞ்ஞானம் கற்றேன் .
பல்கலைக்கழகம் செல்லமுடிந்ததே தவிர
உங்கள் கனவை மெய்ப்பிக்க இயலவில்லை.
மன்னிக்க வேண்டுகிறேன்.
காலத்தின் சுழற்சியில் உங்கள் ஆத்மா
கருக்கொள்ளும் இன்னொரு தமிழுடலில்
நம்பிக்கையோடு நகர்கிறேன் துதித்தபடி..


–வன்னியூர் செந்தூரன்–

No comments:

Post a Comment