Monday, March 27, 2017

எப்படி உங்களால் மறக்க முடிந்தது

மணலாற்றால் போகையிலே
வெலியோயா என்கிறார்கள்
வெஞ்சினம் வெடிக்குது நெஞ்சிலே
கொஞ்சமும் கூசவில்லையாடா குலத்தமிழா?
கானக கரிசலூடே என் கண்பார்ப்பது
கடந்தகாலக் காட்சிகளை மட்டுமே
கொக்குத்தொடுவாய் என்றதுமே
கொற்றவன் லீமாவே தட்டுவான் மனதை
ஒட்டுசுட்டான் சந்தியை கடக்கிறாயே
ராகவனை நினைவிருக்கா ஆதிக்குடியே
புளியங்குளத்தில் இன்று அன்புமில்லை
மாங்குளத்து போர்க் கும் காணாமல் போனான்
இரணைப்பாலைச் செந்தூரன் அழிக்கப்பட்டானாம்
இரணைமடுமாலதிஇரவோடிரவாய் இடிக்கப்பட்டாள்.
கிளிநொச்சி சந்திரன் நொருக்கப்பட்டானாம்.
பரந்தன் சந்தியில் இன்று பெற்றோல் நிலையமாம்.
ஆனையிறவில் யாரோ ஒருவனுக்கு தூபியாமே
தென்னிலங்கைக் கூட்டம் கோயில் கட்டும் திட்டமோ.?
கற்சிலைமடு பண்டாரவன்னியனோ கற்தூளாகினான்
தலை மட்டும் பத்திரமாய் என்னிடமுள்ளது.
முகமாலைப் பனைகளைக் கேள் ஒருநிமிடம்
தீபனின் தீரத்தால் விளைந்தோம் என்று கூறும்
அரசியல் மேதாவிகள் அவசியம் படிக்கவேண்டியது
புன்னகைத் தமிழன் சு.ப. வின் சூட்சுமங்களை..
பேரூந்தில் ஏறியமர்ந்தேன் ஐயோ கடவுளே
வேற்றுமொழி பாடலிட்டால் பெருமையோ
இறங்குமிடம் வந்தது நிறுத்து என்றேன்.
ஹரிஹரி என்று உறுமினான் தமிழ் நடத்துனர்.
எட்டாண்டுகள் எப்படிக் கடந்ததோ இறைவா
எப்படியெல்லாம் மாறிவிட்டது கனவுதேசம்
கொடி பிடிக்கும் கோடாரிப் பாம்புகளின் காலமிது
விடை தெரியாப்புதிராக ஓடும் சிலரோ விரக்தியிலே
அழிந்தோம் சிதைந்தோம் அதைப்பற்றி என்ன
அரச உத்தியோகம் அவசியம் வேண்டுமப்பா
அறப்படித்த கூழ்ப்பானைகளே நீங்கள்
ஆபத்தானவர்கள் உங்கள் கல்விகூட சுயநலமே
ஆனால் ஒன்றை உறுதிபடச் சொல்கிறேன்–நாளை
என் பிள்ளைக்கு நாம் இழந்தவற்றை தான் சொல்வேன்.
என்னை விட வீச்சாக வேண்டும் தமிழ்ப்பற்றுடன்
கல்வி என்பது எம் வரலாறு தந்த பாடம் தானே.

~வன்னியூர் செந்தூரன்~



No comments:

Post a Comment